வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல் வீதிக்கு வரும் குடும்பங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளன!

  • Posted on May 04, 2020

பத்து நாட்களுக்கு முன்பு ’எண்ணங்களின் சங்கமம்’ பிரபாகர் அவர்கள் இது போல வீதிக்கு வந்த ஒரு குடும்பத்தை மீண்டும் மறுவீட்டில் வீட்டில் குடியேற்றிய ஒரு சம்பவத்தை கவனப்படுத்தினார்!

தற்போது கரூரில்! இது போல வெளியேற்றப்பட்ட ஒரு குடும்பம் தெருவிற்கு வந்து தவித்து,அவமானப்பட்டு மீண்டும் காவலர்கள் தலையீட்டால் குடியேற்றப்பட்டுள்ளது குறித்த செய்தி நெஞ்சை பதறவைத்தது!

வறுமையால் வரும் அவமானங்கள் பலவற்றை வாழ்க்கை நெடுகிலும் பார்த்தவன் நான்….!

மனைவி,குழந்தைகளுடன் நடுரோட்டிற்கு மூட்டை,முடிச்சுகளுடன் வந்து செய்வதறியாது திகைக்கும் அவலம் கொடிதினும் கொடிது! இதை பார்க்க,பார்க்க கண்ணில் என்னையும் அறியாமல் நீர் ஆறாய் வடிகிறது.

வெளியுலகிற்கு தெரியாமல் வீட்டு உரிமையாளரின் சுடு சொற்களைத் தாங்கிக் கொண்டு, அடுத்த வேலை உணவிற்கு என்ன செய்வது?,பசித் தீயை எப்படி அணைப்பது? குடும்பத்தின் மானத்தை எப்படிக் காப்பது?..என்ற நிலையில் லட்சோப லட்சம் குடும்பங்கள் இன்று தவித்துக் கொண்டுள்ளன!

என் சக்திக்குத் தக்கவகையில் சாலையில் பசியோடு பார்க்க நேர்பவர்களுக்கு சட்டென்று கையில் இருப்பதை தந்து வருகிறேன்..! எவ்வளவோ நல்லிதயங்கள் நாளும்,பொழுதும் ஓடி,ஓடிச் சென்று உதவியவண்ணம் உள்ளது ஆறுதல் தந்தாலும்..இவை யாவுமே சிறு துளி தான்!

கொரானாவைக் காட்டிலும் மிகக் கொடிதான பசி,வறுமை,அவமானம் பிடுங்கித் திங்க செய்வதறியாது திகைத்தும் நிற்கும் மக்கள் இருக்கும் ஒரு தேசத்தில் வானில் பூமழை பொழிய வைக்கும் கோமாளித்தனங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறதே…என்ன கொடுமை!